Posts filed under ‘குறிப்புகள்’
மெரினாவில் திரண்ட மக்கள் எழுச்சி!
அம்மா என்றழைத்த குழந்தை,ஐயோ என்று சரிகிறது அடுத்த நொடி மண்ணில்.அம்மாவுக்கு முன் நிர்வாணமாய் மானபங்கப் படுத்தப்பட்ட மகன்.அப்பாவுக்கு முன்னால் கற்பழிக்கப்பட்ட மகள்.இறந்தப்பின்னும் துகிலுரியப்பட்ட நம் சகோதரிகள்.மார்பகங்களைத் திருகி இது என்ன குண்டா என கொச்சைப் படுத்தப் பட்ட கொடூரங்கள்.பிறப்புறுப்பில் தோட்டா செலுத்தி துளைக்கப்பட்ட அநீதிகள்.தாயின் மார்பத்தில் பால் குடித்தவாறே மரணித்துப் போனக் குழந்தை.கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்.. இத்தனை கொடூரங்களும் நமக்கு அருகாமையில் இலங்கையில் நம்மவர்களுக்கு..
நம் நிலை இங்கே செய்திகளிலும்,செவிகளிலும் கேட்டு கேட்டு,கேட்க நாதியற்றவர்களாய் நம்மினத்தை விட்டு விட்டு,கைகள் கட்டப் பட்டு,வாய்கள் பூட்டப்பட்டு இயலாமையில் குமுறிக் கொண்டு,இருந்தோம் இத்தனை நாளாய்..எதிர்த்து போரிடத்தான் நம்மால் இயலவில்லை.அழுவதற்கு கூடவா நம்மிடத்தில் கண்ணீர் இல்லை..நம் அழு குரலையாவது இந்த அகிலம் அறியட்டும்.அதற்காக தமிழுணர்வு இயக்கங்கள் ஒன்றிணைந்து ,இறந்த ஒன்றரை லட்சம் தமிழர்களுக்காய் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் ஒன்றை மெரீனா கடற்கரையில்,கண்ணகி சிலை பின்புறம் ஜூன் 26 அன்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தார்கள்..
மெரினா செல்ல ஆயத்தமாகும் போதே வானம் கொஞ்சம் கண்ணீரை இறந்த தமிழனுக்காய் சிந்திவிட்டு,தன் ஆற்றாமையைஅடக்கிக் கொண்டு ஆகாயத்தில் குமுறிக்கொண்டிருந்தது ,நம்மைப்போலவே.
அது தமிழர்களுக்கு,தமிழனின் உணர்வுக்கு விடுக்கப் பட்ட சவாலாக கூட எடுத்துக் கொள்ளலாம்.மழை வருகிறதே என்று தமிழன் வீட்டில் அடங்கி,முடங்கி விடுகிறானா..?இல்லை உண்மை உணர்வுடன், மழை வந்து என்னை நனைத்தாலும் பரவாயில்லை.என் இன மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வருவேன் என மெரினாவில் நிறைகிறானா?என மழை கொண்ட கோட்பாடாகவும் இருக்கலாம்.
ஆனால் மெரீனா சென்றபோது,கடற்கரையில் கடலைவிடவும் பெருந்திரளான உணர்வுக் கூட்டம்,குடும்பங்கள்,குழந்தைகள்,தாய்மார்கள்,தலைவர்கள் என மணற்பரப்பு முழுக்க மனித தலைகள்..உணர்ச்சி மிக்க உணர்வு கோசங்கள்,பனைமர நிழலாய் மணல் சிற்பம்,நாடகங்கள்,வலி சுமந்த ஓவியங்கள்,நினைவுசின்ன அமைப்பு வடிவைமைப்பு ,கண்ணீர் சிந்தி பூ தூவியவர்கள் என உணர்வுகளின் ஒருமித்த கூட்டம் அது ..,இருக்கும் தமிழனை காப்பாற்ற ,இனமானத்தின் ஒருங்கிணைந்த குரல் அது!
அங்கே செல்லும் வரை நான் எதிர்ப் பார்த்திருக்கவில்லை..இவ்வளவு கூட்டம் இருக்குமென்று..இனப்பாசம் இன்னும் செத்து விடவில்லை..தமிழ்மானம் எவரிடத்திலும் மடிந்து விடவில்லை..ஒவ்வொருவருக்குள்ளும் கொழுந்து விட்டு எரிகிறது என்பதை மெரினாவில்,மெழுவர்த்தி வெளிச்சத்தில் கண்டேன்..தமிழீழ விடியலுக்கான வெளிச்சம் அங்கே நிறைய பரவி இருந்தது!
இறந்த தமிழனுக்காய் மெழுகுவர்த்தி நம்மோடு சேர்ந்து தன் கண்ணீரை சிந்தி முடிக்க,அதுவரை ஆற்றாமையை அடக்கிகொண்டிருந்த மேகமும் தன் பங்குக்கு கண்ணீரை தாரை தாரையாக ஊற்றி முடித்தது!
ஏந்துவோம் மெழுகுவர்த்தி! எழுச்சியோடு வாரீர்!

ஏந்துங்கள் கையில் மெழுகுவர்த்தி!!
ஏற்றுங்கள் நெஞ்சில் ஈழம் காண்பதற்கான எழுச்சி!!
500 வது பதிவு – வினைத்தொகை!
வேடிக்கையாகத்தான் எழுத ஆரம்பித்திருந்தேன்..பின்னர் அதுவே ஒரு வாடிக்கை ஆகிவிடும் என்பதறியாமல்!
சிறுவயதில் தம் மகற்கு ,சேமிப்பு பழக்கத்தை கற்று தருவதற்காக ,பெற்றோர்கள் வாங்கித்தரும் உண்டியலைப் போல்தான், என் தமையன் உருவாக்கி தந்தது இந்த வலைத்தளமும்..நீதான் கிறுக்குவியே..அதை இங்கே கிறுக்குடா ..உனக்குன்னு ஒரு பக்கம் இருக்கட்டும்,அதில் உமது எழுத்துகள் சேமிப்பாகட்டும் என்று சொல்லி…
உண்டியலில் ஒவ்வொரு நாளும் பத்து பைசா,ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என கையில் கிடைத்ததை கொண்டு ரொப்பி,பார்த்து பார்த்து சேமித்து,குலுக்கி பார்த்து மனமகிழ்ந்து,அதன் கனத்தினை கையில் நிறுத்திப் பார்த்து..ஆஹா..நிரம்பிக்கொண்டிருக்கிறது..என பெருமகிழ்வு கொண்டு,பின்னொருநாளில் ,உண்டியல் நிரம்பி இருக்கிறது ..உடைத்துப் பார்ப்போமென,உடைத்து எண்ணிலடங்கா சில்லறைகளை எண்ணிடும் வேளையில் ..நாமா சேர்த்தோம் இவ்வளவு பணத்தை.. என்று மனதில் வருமே ஓர் மட்டற்ற மகிழ்ச்சி.. அதே மகிழ்ச்சிதான் இன்று எம்மை ஆட்க்கொண்டிருக்கிறது..
ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாய் கிறுக்கி..நாமா எழுதிவிட்டோம் 500 பதிவுகள் எனுமளுவுக்கு என்னை பிரமிக்க செய்கிறது ..பேரானந்தம் சூழ்கிறது.
நானும்,எழுதுகிறேன் என்பதில் தொடங்கி ,நல்லாத்தான் எழுதுறீங்க..தொடருங்க..என சொல்லிடும் பின்னூடங்களில் மனதை பறிகொடுத்து,வாழ்த்துக்கள் நண்பரே..வளர்க என அன்பர்கள் சொல்லிட கேட்டு,இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் என எமை செதுக்கும் சிற்பிகளின் ஆலோசனை பெற்று,இது ரொம்ப மொக்கை என நிராகரிப்போரின் கருத்துகள் ஏற்று,கிறுக்கும் ஆர்வம் என்னில் ஓர் கிறக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டது.
கிறுக்கிகொண்டிருக்கிறேன்,கிறுக்கினேன்,கிறுக்கி கொண்டே இருப்பேன் எனுமளவுக்கு அன்பர்களின் ஆதரவு என்னை ஆழமாக்கி விட்டது.எழுதும் ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது.
அன்பர்கள் ஒவ்வொருவரின் பெயராக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை கொண்டேன்…நேரமின்மையால் எழுத இயலவில்லை..இருந்தாலும்..எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..இந்நன்நாளில்!
—————————————————————————————————————————————
சுயபுராணம் போதும் …எதாவது விஷயம் இருக்கா? என்போருக்காக..
நான் 500 வது பதிவெழுதும் சமயத்தில் ,திரைப்படங்களுக்கான தேசிய விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது!அதில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழ் சினிமா அதிக அளவில், தேசிய விருதுகளை வாங்கிக் குவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது!ஒரு தமிழனாய் கர்வப்பட வைத்திருக்கிறது!விருது வென்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்!
விருது பெற்றவர்கள் விவரம்:
சிறந்த படம் : ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர் : தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு : தினேஷ் (ஒத்த சொல்லால… ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங் : கிஷோர் (ஆடுகளம்)
சிவராம் காரந்த் விருது : ஆடுகளம்
சிறந்த பொழுதுபோக்கு படம் : தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம் : சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு : மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை : சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர் : தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை : சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு : சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம் : ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர் : விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி விருது : வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).
தாயைப்போல் தான் அவளும்!
தாயைப்போல் தான்
அவளும்
எம்அன்பை சுமந்தவள்!
காதல் பொழிந்து
அவளும்
எம் உள்ளம் நிறைந்தவள்!
பாசம் குழைந்து
அவளும்
எம் நேசம் புகுந்தவள்!
உயிராய் இறங்கி
அவளும்
எம் உறவாய் கலந்தவள்!
அன்பிற்க்கின்று பிறந்தநாள்..அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்!
aspirations – ஓவியக் கண்காட்சி
aspirations -சென்னை ஓவியக்கல்லூரி முதுகலை மாணவர்கள்(MFA) சென்னை லலித் கலா அகாடமியில் வைத்திருக்கும் ஓவியக் கண்காட்சியின் பெயர்.கிட்டத்தட்ட 22 மாணவர்களின் மனம் மயக்கும் படைப்புகளின் அரங்கேற்றம் அது.நிறமிக்க படைப்புகள்..நிறைவான படைப்புகள் பார்வைக்கு வசீகரம் தந்தன..மார்ச் 14 லிருந்து 20 மார்ச் 2011 வரை ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சியில் பங்கேற்கும் ஓவியர்களில் என் நண்பர் வேலுவும் ஒருவர்..அவர் அழைப்பின் பெயரிலேயே அங்கே சென்றிருந்தேன்.அவர் வரைந்திருந்த சீற்றம் மிகு சேவலின் வேகம்,அவர் தூரிகையின் வேகத்தில் விவேகம் காட்டின. அனைத்தும் ஆழமான,பக்குவமான ஓவியங்கள் .நிச்சயம் போய் பாருங்கள் உங்கள் பார்வைக்கு விருந்தாகும் பல படைப்புகள் அங்கே உள்ளன..















