Posts tagged ‘திருமணம்’
எடைக்கு எடை தங்கம்!
உன் தகப்பன்
உன் எடைக்கு எடை
தங்கம் தருகிறேன்
என்றபோதே
நான்
யோசித்திருக்க வேண்டும்.
உன்னை மட்டும்
அனுப்பி வைத்து விட்டார்
பார்!
நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது வாழ்க்கை!
- பிறந்த நாட்டை விட்டு
பிரிந்து
உறவுகளை விட்டுவிட்டு
தனியனாய்
உரிமைகள் அற்று
சிதறி
எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாய்
எக்ஸ்ட்ரா டுயூட்டி பார்த்து
கற்பனை வாழ்வில் மட்டுமே
கனவுகளில் லயித்து
நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது
எங்கள் வாழ்க்கை!
- எனக்கொரு கனவு
கடனில் இருக்கும் வீட்டை
என் காலத்திலாவது
கட்டி மீட்டிட வேண்டும்!
- நண்பனுக்கொரு கனவு
தன்னோடு கஷ்டம் போகட்டும்
தன் தமையன்களுக்காவது
நல்ல படிப்பை நல்கிட வேண்டும்!
- அறைத் தோழன்னுக்கோர் கனவு
அப்பாவின் ஆப்பரேசனுக்கு
பணம் சேர்த்து
மீளாத் துயரில் இருக்கும்
குடும்பத்தை மீட்டிட வேண்டும்!
- தோழியின் கனவு
தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும்
தன் தங்கைகளுக்கு
திருமணம் செய்து பார்த்து
மகிழ்ந்திட வேண்டும்!
- இப்படியாய் நாங்கள்
கனவுகள் வெவ்வேறு
பணம் ஒன்றே பிரதானமாய்
எல்லோரும் வெளிநாட்டில்!
- காய்ச்சல் வந்ததென்றால்
கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு
அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட
அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால்
ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில்
நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால்
நாங்களும் அகதிகள்தான்!
- அம்மா அழைக்கிறாள்
சாமி உன்முகம் பார்த்து
நாளாச்சு..
கண்ணுலையே நிக்குற..
வந்து காட்டிட்டு போ
உன் முகத்தைன்னு!
- தகப்பன் சொல்கிறார்
தங்கச்சிக்கு மாப்ள
பாத்துட்டேன்..
கல்யாணத்துக்கு
பணம் பத்தல
அனுப்பி வைப்பான்னு!
- தம்பி கேட்கிறான்
அண்ணா..நான் நடந்தே
பள்ளிக்கூடம் போறேன்
சைக்கிள் ஒன்னு
வாங்கி தாணான்னு!
- தங்கை கேட்கிறாள்
கண்டிப்பா
என் கல்யாணத்துக்கு
வருவியான்னு!
- முகத்தில் மலர்ச்சி காட்டி
உள்ளத்தால் அழுகின்றோம்
எப்போ விடியும்
எங்களின் வாழ்க்கையென்று!
காதலில் கசிந்துருகுகிறது!
இன்று
நீயவளின்
கரம்பற்றி விட்டதினால்
உன்னவளின்
கால்பற்றி
உயிர் வாழ்கிறேன் நானே!
இத்தனைக்காலம்
என்னை நீயும்
ஏங்கவைத்து விட்டாயேடா!
காதலில்
கசிந்துருகுகிறது
உன்காலில்
போட்ட மெட்டி!
இரு கோடுகள்!
- இணையாத இரு கோடுகள்
எதை நோக்கி
பயணிக்கின்றன!
- பயணம் ஓர்
எல்லையை எட்டப்பட
வேண்டும்!
- போகாத ஊருக்கான
பயணம்
வேலையற்றவனின் வெட்டித்தனம்!
- ஒருமிக்காத மனமும்
சேர்ந்திராத கோடுகளும்
நோக்கம் அற்றவை!
- இணை கோடுகள் என்கிறோம்
கரம் கோர்த்து
இணையாக் கோடுகளை!
- இரு இணைகின்ற மனது
ஒருமித்துப் போகிறது
மனம் நிறைய மகிழ்ச்சியுடன்!
- ஒத்துப் போவதில்
உள்ள வெற்றி
ஒற்றைக்கோட்டில் உள்ள தத்துவம்!
அன்னையர் தினம்…
கணவனை சுமந்து
கரு சுமந்தாய்!
கணவனை விடவும்
கருமேல் காதல் சுமந்தாய்!
வாந்தியெடுத்து,வலிதாங்கி
கரு வளர்த்தாய்!
கருவை உருவாக்கி
பிரசவித்தாய்!
பாசம்காட்டி,பாலூட்டி
வளர்த்தெடுத்தாய்!
மழலைக் குறும்பை மனமகிழ்ந்து
பார்த்து ரசித்தாய்!
அப்பா அடிக்கின்ற தருணம்
அதைத்தடுத்து காவல் நின்றாய்!
உனக்கென கனவின்றி
பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!
பிள்ளை மனம் பூரிக்க
திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!
இன்று பேரக்குழந்தை உன் மடியில்
தாயே..
உலகம் என்றுமே உன் காலடியில்!