Posts tagged ‘தூக்கு தண்டனை.கில்லட்டின்’
600 வது பதிவு – மரண தண்டனை மரணித்து போகட்டும்!
இன்று வெற்றிகரமாக அறுநூறாவது பதிவை எழுதுகிறேன்.
இச்சமயத்தில் எனக்கு இதுவரை ஆதரவு தந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு ,இது தினசரி நானெழுதும் சராசரி பதிவாகிவிடாமல் என்னால் இயன்ற அளவு ஓர் ஆக்கபூர்வமான பதிவாய் பதிவு செய்ய வேண்டும்,அது ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும் சமுதாயத்திற்கு ஏதேனும் பயன்பட வேண்டும் என்று எண்ணி எழுத ஆரம்பிக்கின்றேன்.என்னுடைய அறுநூறாவது பதிவு வரும் இவ்வேளையில் ,ஒவ்வொரு தமிழனும் இடைவிடாது பேசி வரும் தமிழனுக்கு ஏற்பட்ட இன்னல்,சிறைக்கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்டு மரணதண்டனை பற்றிய எண்ணங்களோடு உறங்க மறுக்கும் விழிகளோடு ஒவ்வொரு நாளையும் கடத்தும் நம் தமிழ் சகோதரர்கள் பற்றிய எண்ணங்களே என் முன் நிழலாடுகின்றன.இன்று தமிழனின் ஒருமித்த குரலாய் கேட்கும் மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து நம் தமிழ் சகோதரர்களுக்கு மட்டுமான தனித்த குரல் அன்று..
ஒட்டுமொத்தமாய் இந்நாட்டிலிருந்தும்,நம் சட்டத்திலிருந்தும் அது அகற்றப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானிகளின் ,உணர்வாளர்களின் அவா!
இந்த சூழலில்தான் நண்பர்கள் சிலர் அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு வைக்கிறார்கள்.தமிழர்களுக்காக போராடுவது சரி,ஏன் மரண தண்டனையே வேண்டாமென்று போராடுகிறார்கள்..இந்நாட்டில் குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்தவனை நீங்கள் அறியவில்லையா?பெற்ற பெண்ணையே கற்பழித்து கொடுமை செய்தவனை நீங்கள் கேள்விப்பட வில்லையா?மும்பையில் அப்பாவி மக்கைளை கொன்று குவித்தார்களே அவர்களுக்கும் நீங்கள் நீதி கோருகிறீர்களா என்று?அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது என்று நாம் எண்ணினாலும்
இதற்கு நாம் பதில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்..ஆம் அவர்களுக்காகவும்தான் நாம் நீதி கோருகிறோம் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்தில் நடந்தபடிதான் இருக்கிறது.அதில் மறைக்கப்பட்டவை நிறைய..வெளிச்சத்திற்கு வந்தவை வெகு சில.அதற்கான தண்டனைகளை நம் சட்டமும் அளித்துக் கொண்டுதானிருக்கிறது.ஆனால் குற்றங்கள் குறைந்தனவா??ஆட்டோ சங்கர் இறப்புக்குப் பின் இங்கே வன்புணர்வு,கற்பழிப்பு காணாமல் போய் விட்டதா?மனிதன் அவற்றைக்கண்டு அஞ்சுகிறானா?சதாம் உசேனுக்கு பின் இன்னொரு சதாம் உருவாக வாய்ப்பு இல்லை என்கிறீர்களா?
மனிதர்களுக்கு சில இயல்பு உண்டு.தன் குடும்பத்தில்,தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை எனும் போதே உண்மை வலியில் துடிப்பார்கள்,அந்த பயந்த மனநிலையில் பயணிப்பார்கள்..மற்றவர்களுக்கு நேருவதை காணும் போது அது வெறும் உதவியாகவோ,இரக்கமாகவோ அல்லது அவனுக்கு நடக்கட்டும் என துச்சமாகவோ மட்டும் தான் எடுத்துக் கொள்வார்கள்.அந்த மனநிலைதான் மரண தண்டனை வேண்டும் என் வாதிடுபவர்களுக்கும்,வேண்டாம் என்பவர்களுக்குமான வித்யாசம்.இந்த இடத்தில் நாம் பாதிக்கப்பட்டவன் நம் குடும்பத்தில் ஒருவன் என எண்ணிப் பார்ப்போமானால் மரண தண்டனை வேண்டாம் என்பவனாகவே இருப்போம்.
இந்நிலையில்தான் நாம் ஒரு மனிதன் குற்றம் செய்வதற்கான பின்னணி,அவன் மனநிலையை எண்ணிப்பார்த்தல் அவசியம்.குற்றம் செய்த பலர் இவளை இப்போ கற்பழித்தாக வேண்டும் என திட்டத்தோடு செய்வதில்லை,குழந்தையை வன்புணர்வு செய்பவன் கூட..அந்த நேரத்தில் அவன் குடித்து போதையில் இருந்திருக்கலாம் அல்லது சொல்லொண்ணா எண்ண மாற்றத்தில் உடல் ரீதியான மனரீதியான மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கலாம்.அவன் அந்த சமயம் எனன செய்கிறோம் என யோசிக்காமல் அவன் வெறியை தீர்த்திருக்கலாம்.வெறி இருந்தாலும் அதனை ஆறாம் அறிவின் துணை கொண்டு அடக்கி கொள்பவன் சராசரி மனிதனாகிறான்..வரம்பு மீறுபவன் சைக்கோ மனநிலையில் இருந்திருக்கிறான்,இருக்கிறான்.சில நேரங்களில் எதிர் பாலினம் அணியும் உடை கூட ஒருவன் மனநிலையை மாற்றி காம இச்சை தூண்டும் காரணியாகி விடுகிறது.ஏன் பல வீடுகளில் சில நேரங்களில் தன் மனைவியையே அவள் விருப்பமின்றி வன்புணர்வு செய்யும் கணவன்மார்கள் இருக்கவே செய்கிறார்கள் .அதில் நீங்களும்,நானும் கூட இருக்கலாம்.அங்கு கணவன் என்ற அங்கிகாரம் மட்டுமே நம்மை காப்பாற்றி விடுகிறது.மனைவியின் விருப்பமின்றி நம் இச்சையை தீர்க்க செய்யும் அதுவும் ஒருவகையில் சமுதாயம் அங்கிகரித்த வன்புனர்வுதான் .
அதற்காக கொலை,கொள்ளை,கற்பழிப்பு சமூக குற்றங்கள் செய்யும் எல்லோருமே திட்டம் இல்லாமல் செய்பவர்கள் எனவும் நான் கூற முன்வரவில்லை..சிலர் திட்டமிட்டு கற்பழிப்பதும் உண்டு..குழந்தைகளை திட்டமிட்டு வன்புணர்வு செய்வதும் உண்டு.அவனுக்கு பெயர்தான் சைக்கோ. அது ஒரு வகையான மன வியாதி.அவனுக்கு அதுதான் சுகம் என்பதாய் எண்ணுகிறான்.சிலர் பரம்பரை பரம்பரையாக பகையுனர்வோடு,பழி தீர்க்கும் மனநிலையோடு வளர்வான்.. நீ அவனை பழி வாங்க வேண்டும் என சொல்லி வளர்க்கும் குடும்பங்களும் உண்டு..அவர்களுக்கு மரணதண்டனை பற்றிய அறிவு இல்லை என்கிறீர்களா?அவன் வெறிக்கு முன் சட்டம் ,தண்டனை என்பவையெல்லாம் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.அவன் மரண தண்டனை கொடுத்தாலும் எதிர் கொள்வோம் முதலில் எதிரியை கொல்வோம் எனும் மனநிலையிலேயே வளர்கிறான்.இதே மனநிலையில் வளர்பவன் தான் தீவிரவாதம் செய்பவனும்,தாம் கொண்ட கொள்கைக்காக அடுத்தவரை பலி தீர்ப்பது அல்லது எதிரி நாட்டை,மக்களை பலி கொள்வது.அந்த வெறிதான் எதிரியைக் கொன்று தாம் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையும் ஒருவனுக்கு வளர்க்கிறது.தன்னை தானே அழித்துக்கொள்ள துணிபவனை மரண தண்டனை எனன செய்துவிட இயலும்.அந்த மனநிலையில் இருப்பவனுக்கு அறிவும்,தெளிவும்தான் தேவை.ஒன்று அவனே திருந்த ,தெளிவுபட வேண்டும்.
மரண தண்டனை என்ற ஒற்றை சொல் அவன் எண்ணத்தை,வெறியை மாற்றி விட முடியாது.அவனுக்கு நிச்சயம் வேறு வகையான கடுமையான தண்டனைகள் தரலாம் சமுதாயத்தில் தவறு செய்யக்கூடாது என்பதற்கு முன் மாதிரியாக,ஆனால் மரண தண்டனைதான் சமுதாயத்தை சீர் படுத்தும் காரணி என கூறி விட முடியாது.மரண தண்டனை மட்டுமே மாற்றம் செய்ய வல்லது என்றால் சமுதாயத்தில் எந்த பிரச்சினையும் வந்திருக்காது.
ஒரு முறை என் சித்தப்பா கடுமையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மரண விளிம்பில் அவசர ஊர்தியில் ஏற்றி வருகிறார்கள் எங்கள் வீட்டிற்கு.அது முதல் அவசர ஊர்தி பார்த்தாலே ஓர் பதற்றம் என்னில் சேர்ந்து கொண்டது சில நாட்கள்.இதனை என் நண்பர்களிடம் சொன்ன போது அவர்களுக்கும் அத்தகைய அனுபவம் இருப்பதாய் சொன்னார்கள்.அதே போல்தான் நடு ராத்திரியில் வீட்டு தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் கூட, யாருக்கு எனன ஆச்சோ என்கிற பயம் கலந்த மன அதிர்வை உண்டு செய்தது ஒரு காலத்தில்.ஏன் தந்தி பாவித்துக்கொண்டிருந்த சமயத்தில் தந்தி வந்திருக்கிறது என்றாலே பயம் வரும்.இந்த மனநிலைதான் மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர் கொள்பவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும்,ஒவ்வொரு நொடியும்… உணர்வீர்களா?
மரண தண்டனை என்பது தண்டனைக்கு உள்ளாகி இறப்பவனைக் காட்டிலும் அவன் குடும்பத்தையே அதிகம் பாதிக்கிறது,மனரீதியாக அந்த குடும்பத்தையும் பாதிக்கும் தண்டனையாகிறது.ஒரு கொலை செய்பவனைக் கூட்டி வந்து அங்கீகாரத்தோடு அரசாங்கம் செய்யும் கொலை.குற்றம் செய்தவனுக்கு எதிராக சட்டம் செய்கிற குற்றம்.கொலைக்கு கொலை தண்டனை என்பது எந்த ரீதியாக ஏற்றுக்கொள்ள இயல்கிறது.தண்டனையை கடுமையாக்கலாமே தவிர,கொல்வது என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்..
மனிதநேயம் வளர்ப்போம்!மரணதண்டனையை வேரறுப்போம்!!