Posts tagged ‘தீண்டாமை’
அகம் கழுவும் பூசை!
மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
சமூகத்தின் பெயரால்
தொழிலின் பெயரால்
நிறத்தின் பெயரால்
நம் அகம் கொண்ட
அகங்கார அழுக்கு
கழுவப்படட்டும்!
ஆயுதங்களை கழுவுவது போல்
உன் அகத்தினையும்
கழுவு மனிதா!
அகம் கழுவும் பூசையொன்றை
அகிலத்துக்கு பரிசளிப்போம்!
நீயே பெரியார்..!
வெள்ளை தாடியுடன்
விடியல் கண்டவனே!
கருப்பு சட்டையில்
நெருப்பாய் இருந்தவனே!
சாதிக்கு சவுக்கடி
கொடுக்கவே நீ பிறந்தாய்
முற்போக்கு சிந்தனை விதைத்து
சரித்திரத்தில் நீ உயர்ந்தாய்!
வாழ்க நின் புகழ்!!!
ச(சா)தி வலை!
சாதி எதிர்த்து பாடியவனும்
சாதி எதிர்த்து சாடியவனும் கூட
சாதி அடையாளமாக்கப்படுகிறான்
சதி நிறைந்த சமுதாயத்தில்!
அவன்.. இவன்..
- அன்றைக்கு ஆண்டை வீட்டின்
கொத்தடிமையாய்
அவன்!
- இன்றைக்கு கல்வியறிவில்
மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்
சமுதாயத்தில் அவன் மகன்
இவன்!
- அன்றைக்கு சேரிக்காரன்
என்று
ஒதுக்கப்படவனாய்
அவன்!
- இன்றைக்கு சேற்றில்
பிறந்த செந்தாமரையாய்
ஒளிமிக்க இவன்!
- அன்றைக்கு அவன் அப்பனை
அடேய் என்றழைத்தான்
உயர்குலத்தான் என்கிற
அவன்!
- இன்றைக்கு அவன் மகனை
வாய்விட்டு வராத வார்த்தைகளால்
சார் என்கிறான் அவனே
இவன்!
- பணம் இருக்கிறது
படிப்பறிவில் உயர்ந்து விட்டான்
சாதி அழிந்துவிட்டது என்கிறான்
அவன்!
- தகுதியில் உயர்ந்தபின்னும்
தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்
இழிகுலத்தான் என்று சொல்லி
கொலைவெறியில்
இவன்!
- தாழ்த்தப்படவன் என்றறிந்தும்
படிக்கும் போது
“மச்சி “என்று
நட்பு பாராட்டியவன்
அவன்!
- தன் குலப்பெண்ணை
காதல் கொண்டான் என்பதற்காய்
கீழ்சாதிக்கார நாய்
என்கிறான் இப்போ
இவன்!
- பள்ளியில் படிக்கிறான்
அவனும் இவனும்
ஒன்றாய்..
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’
கருப்பை கடந்து போகாதீர்!
கரும்பலகையில் இருந்துதான்
பலரது அறிவு
வெளுக்க துவங்குகிறது!
கருப்பை அபசகுனமென்று
கடந்து போகாதீர்!